மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு பயிற்சியளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அசஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெண்களுக்கு ஒரு மாத கால தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியான துணி, சணல் பொருட்களிலிருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மணி பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்க்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் வகித்தார். ஸ்ரீ ராமஜெயம் பயிற்சி மையத்தின் நிறுவனர் கே.ரவி வரவேற்றுப் பேசினார்.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்து தெரிவித்துப் பேசினார். இதில் பேசிய அவர், பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதன் மூலம் சமூக நிலைப்பாடுகளில் சம நிலையை அடைய முடியும். இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சி மூலம் தொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சி பயிற்சி பெற்ற இந்துமதி தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் தையல் மற்றும் எம்பிராய்டரி தொழில் தொடங்க விண்ணப்பித்து ரூ.11 லட்சம் கடன் பெற நாமக்கல் மாவட்ட தொழில் மைய மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது போன்ற பிற பெண்களுக்கு முன்வந்தால் பெண்களுக்கு கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளன எனக்குறிப்பிட்டார். பெண்கள் தொழில் தொடங்க சமூக ஊடகங்கள் ( டிஜிட்டல் மார்க்கெட்டிங் )மிக பெரிய வாய்ப்பு அளிப்பதாகவும் , அதனை பயன் படுத்தி பொருளாராதர மேம்பாடு அடைய வேண்டுமென்றும் அவர்குறிப்பிட்டார். விழாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.