நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு சாமி ஊஞ்சல் ஆடுதல், பூபந்தல், பூமாலை அலங்கரிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று கங்கணம் கட்டி, சக்தி கரகம் எடுத்து விடியற்காலை 2 மணி அளவில் தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து கோவில் பூசாரிகள் பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி, ஶ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகே இருந்து புறப்பட்டு பம்பை, மேளதாளங்களுடன் ராசிபுரம் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்தல் திருவிழாவில் கலந்துகொண்டு பூ மிதித்து தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர்கள் அலங்காரத்தில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்ச் 1 இல் கோயிலில் இருந்து சாமி அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் முத்துகாளிபட்டி அருகே உள்ள மயானத்தில் மயான கொள்ளை பூஜை நடைபெறும்.
மார்ச் 3 இல் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.