தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் ராசிபுரம் பகுதியில் கொள்ளை சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற சுற்றித்திரிந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஶ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த கோமதி (45), வெண்ணந்தூர் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிந்து வருகிறார். முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள இவரது வீட்டில் கடந்த 20.01.25 அன்று வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை திருட்டுப் போனதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்ற ராசிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் செல்வதை சிசிடிவி கேமரா மூலம் அறிந்த காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தடுக்கி விழுந்ததால் கை, கால்கள் முறிவு ( TREATMENT IN GH)
இந்த நிலையில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸார் துரத்திச்சென்றார்களாம். இதில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஒட்டிய போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூவரில், இருவருக்கு கை,கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் டேவிட்(எ)சுந்தர்ராஜ்( 24), சென்னையை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மணி (22), வேலூர் பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரது மகன் மணிகண்டன் (47) ஆகியோர் என தெரியவந்தது. மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளி மீது 74 வழக்குகள்
மேலும் விசாரணையில் 20.01.25 முதல் 23.01.25 வரை சேலம்,ராசிபுரம், நாமக்கல்,புதுக்கோட்டை மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது 3 திருடர்களும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு மாவட்டங்களில் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை கண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், இவர்களில் மணிகண்டன் என்பவர் மீது 74 குற்ற வழக்குகளும், டேவிட் மீது 12 வழக்குகளும், மணி என்பவர் மீது 7 வழக்குகளும் பல்வேறு காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.