ராசிபுரம் நகருக்கான புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உறுதியளித்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் குடியரசு தின விழாவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்றார். இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., மேலும் பேசியதாவது:

இந்தியாவில் முதன்முறையாக மகளிர் சுய உதவி குழுக்கள் என்னும் முறை 1989-இல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை தமிழக முதலமைச்சர் தள்ளுபடி செய்து, மேலும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணத் திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் நலன் காக்க பயிர்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மீண்டும் பயிர்கடன் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ. ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறத்தில் உள்ள எளிய ஏழை எளிய மாணவர்கள் மற்றும் ஆதி திராவிட மாணவர்களின் மாணவர்களுக்காக காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தப்படுகிறது. இதனை பார்த்து தான் கனடா நாட்டிலும் இது போன்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் மின்விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிகாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ராசிபுரம் சுற்று வட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.845 கோடி மதிப்பீட்டில் இரசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறன. வரும் தீபாவளி பண்டிகைக்குள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அடுத்த பொங்கலுக்குள் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்றார்.
கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல். இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, தேசிய வாக்காளர் உறுதிமொழி, காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி, தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தூய்மை பணிகள் குறித்த உறுதிமொழிகளை கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்று கொண்டனர். மேலும், ஊராட்சியின் 11 தூய்மை காவலர்கள் மற்றும் 3 தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் கு.செல்வராசு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனார்.