ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறியபடி சென்றதை பார்த்த பொதுமக்கள் அதனை சேகரித்து முதியவரிடம் ஒப்படைத்தனர்.
ராசிபுரம் அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிநாயக்கர் (69), விவசாயி. இவர் தனது கால்நடைகளை விற்ற பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக பையில் எடுத்துக்கொண்டு திங்கள்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்டார். ராமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவர்,அவ்வழியை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு ராசிபுரம் சென்று கொண்டிருந்தார்.
கோனேரிப்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்ற போது வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியபடியே சென்றுள்ளன. சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு பையில் இருந்து நோட்டுகள் சிதறியபடியே சென்றதால், இதனை பார்த்த சிலர் மற்றொரு வாகனத்தில் துரத்திச் சென்று முதியவரிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாலையில் கிடந்த நோட்டுக்களை பலரும் சேகரித்து முதியவரிடம் கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட முதியவரிடம் தனது சொந்த ஊர் ராமநாயக்கப்பட்டி கிராமம். கால்நடைகள் விற்ற பணம் ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்கு 500 ரூபாய் நோட்டுகள் நான்கு கட்டுகளில் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பணம் கொண்டு வந்த பையில் தொங்கவிட்டபடி வந்ததால் ஒட்டையாகி சாலையில் சிதறியிருக்கலாம் என்றார். மேலும் இவர் கொண்டு சென்ற போது சிதறிய பணம் ரூ.18 ஆயிரத்து மட்டும் பொதுமக்கள் சேகரித்து கொடுத்தனர். இதில் பல ஆயிரங்கள் காற்றில் பறந்திருக்கலாம் என இதனை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கிடைத்த பணத்தை பெற்றுக்கொண்ட முதியவர், நன்றி உணர்வோடு யாருக்காவது பணம் வேண்டுமானால் எடுத்துக்கொல்லுங்கள் என சேகரித்து கொடுத்தவர்களை பார்த்து அப்பாவிதனமாக கேட்டது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் இருந்த பணத்தை மீட்டுக்கொடுத்து ராசிபுரம் பழைய பஸ் நிலையம் சென்று அப்பகுதியில் இருந்த கனரா வங்கியில் இறக்கி விட்டுச் சென்றனர். கொண்டு வந்த பணத்தில் சில ஆயிரங்கள் குறைந்தபோதும், கவலைப்படாத அந்த முதியவர் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்று செலுத்திய பின்னர் ஊர் திரும்பினார்.