ராசிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலராக இருந்து ஒய்வு பெற்ற அழகப்பன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் திருடிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுதெரு பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவர் தீயணைப்புதுறையில் மாவட்ட அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன்.19- அன்று வீட்டை பூட்டி விட்டி சென்னையில் உள்ள தங்களது மகளை பார்க்க இருவரும் சென்றிருந்தனர். இந்நிலையில் மறுநாள் வீட்டு வேலைகாரப் பெண் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டின் பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த சுமார் 30 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து, காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் அழகப்பன் புகாரின் பேரில் ராசிபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்த குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இதே போல கொள்ளை நடந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளிகளை வெளியில் எடுத்து விசாரணைக்கு ராசிபுரம் அழைத்து வந்தனர். விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் ராஜசேகரன் (31), மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவரது மகன் மகேந்திரன் (33) என தெரியவந்தது. ராசிபுரம் நகரில் அழகப்பன் வீட்டிலும் திருடியது நாங்கள் தான் என ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 30 சவரன் தங்க கட்டிகளையும் மீட்டனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் 24 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தற்போது ராசிபுரம் திருட்டு வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.