நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆனைகட்டிபாளையத்தில் ராசி கார்பன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மரத்தூள் உள்பட கொசுவர்த்தி தயாரிக்க மூலப்பொருள்கள் தயாரிப்பு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை நடராஜன், என்பவர் கடந்த 25ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.இங்கிருந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஊதுபத்தி மற்றும் கொசுவர்த்தி தயாரிப்பிற்காக அந்த தூள்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான மூலப்பொருட்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மரத்தூள் குவியலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்தூள் உள்ளிட்டவை எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.





