நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சார்பில், ‘மாவட்ட அளவிலான தன்னார்வ தொண்டர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். சேலம் பெரியார் பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளாக பங்கேற்று பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி.,ஆர்.விஜயராகவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது:

மாணவ, மாணவியர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை மிக கவனமாக கையாள வேண்டும். தேவையின்றி தங்களுடைய புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், சமீபகாலமாக மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்ஆப் மற்றும் இணையதளம் மூலம் தவறான செய்திகள் அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதனால், மாணவ, மாணவியர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார்.
நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, ரெட் கிராஸ் வரலாறு, கொள்கைகள் மற்றும் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான கடமைகள் குறித்து விளக்கினார். மாநில முதலுதவி பயிற்சியாளர் பெஞ்சமின், முதலுதவி அவசியம் குறித்தும், அதன் செயல்முறை பற்றியும், தன்னார்வ சிகிச்சையாளர் சதீஷ்குமார், போதை பொருள் பயன்பாட்டை எவ்வாறு தவிர்க்கலாம், போதை நபர்களை எவ்வாறு சிகிச்சையின் மூலம் விடுவிக்கலாம் என்பது குறித்தும் விளக்கினர். நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் அன்பு மலர், நாமக்கல் மாவட்ட மனநல அலுவலர் இந்துமதி ஆகியோர் துறைகளின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். ரெட் கிராஸ் நாமக்கல் மாவட்ட தலைவர் மாதையன், திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் புவனேஸ்வரி, சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.





