மேய்ச்சல் புறம்போக்கு என வகைப்படுத்தப்படுத்திய நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு மாற்றி மேய்ச்சலுக்கு உகந்த நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக ஒதுக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் E.R.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களைப் பற்றிய விமர்சனங்களும், விவாதங்களும் ஆரம்பித்திருக்கின்றன. பல தலைமுறைகளுக்கு முன் ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலங்கள் இன்றைக்கு அந்தப் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. பெரும்பாலான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் பெருநகரங்களின் மத்தியிலோ வீடுகளுக்கு நடுவிலோ இருக்கின்றன. நிறைய விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு மக்கள் வாழ்கின்ற பகுதிகளாக மாறியிருக்கின்றன. அந்த மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாத காரணத்தால் உபயோகமற்று கிடக்கின்றன. அந்த நிலங்களை மீண்டும் மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவதற்கு சிறிதளவு கூட வாய்ப்பில்லை. தமிழக அரசு அந்த நிலங்களுடைய வகைப்பாட்டை மாற்றி கொடுத்து அதை பயன்படுத்த வேண்டும். அதற்கு சமமான நிலங்களை ஆடு, மாடுகள் வளருகின்ற பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஒதுக்க ஏற்பாடு செய்யலாம். இப்போதைய கள நிலவரத்திற்கு ஏற்றபடி யோசித்து முடிவுகளை எடுத்தால் தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதை விட்டுவிட்டு அரசியலுக்காக வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடுகளுக்கு குரல் கொடுக்கிறேன் என்று மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க முயற்சித்தால் அது நடைமுறை சாத்தியமல்ல.