சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் தாக்குதல் நடந்திருப்பதை விடுதலைக் களம் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்**. மர்ம நபர் ஒருவர் இன்று (ஜூன் 16-2025) மாலை மதிமுக தலைமை அலுவலகம் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். தீயணைப்பு ஊழியரின் சீருடையில் இருந்த அவர் மதிமுக அலுவலகத்தில் உள்ள பொருட்களை கட்டையால் அடித்து உடைத்ததோடு மேல் சட்டையை அவிழ்த்து ஆபாசமாகவும் பேசியுள்ளார். தகவல் அறிந்து வந்த காவலர்கள் அந்த நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தை தாக்கிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
**தமிழ்நாட்டுக்கும், உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் ஈடு இணையற்ற தொண்டாற்றி வருகிறவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிற நிலையில் கூட, மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிற இந்த தாக்குதல் அதிர்ச்சி அடைய வைக்கிறது**. காவல்துறையினர் உடனடியாக இதுகுறித்து விசாரித்து முழு பின்னணியை வெளியிட வேண்டும்.
**தமிழ்நாட்டில் இருக்கும் கட்சி அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு இனியாவது உணரவேண்டும் என்று விடுதலைக் களம் கட்சி சார்பில் அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.