ராசிபுரம் பகுதியில் திருமண விழாவில் மணப்பெண் அறையில் 26 அரை சவரன் நகைகள், ரொக்கம் ரூ.3 லட்சம் திருடிச்சென்றது தொடர்பான வழக்கு விசாரணையில் போலீஸார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரை திங்கள்கிழமை கைது செய்து, நகைகள், ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

வெண்ணந்தூர் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கே.ராஜவேல். இவர் எலச்சிப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி கோம்பைக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக உள்ள இவர்களது மகள் அகிலாராஜவேல் என்பவருக்கும், ராசிபுரம் நகரைச் சேர்ந்த ஆர்.பி.ராஜேந்திரன் என்பவரின் மகனான வேளாண்மைத்துறையில் பணியாற்றி வரும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கு திருமணம் ராசிபுரம் நீதிமன்றம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஜூன்.6- வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்நிலையில் மணப்பெண் வீட்டாருக்கு சொந்தமான நகைகள் 26 அரை சவரன், ரொக்கம் ரூ.3 லட்சம் போன்றவை மணமேடையின் அருகேயுள்ள மணப்பெண் அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்து அறையில் இருந்து பீரோவை பார்த்தபோது அதிலிருந்து நகை, ரொக்கம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது மணப்பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் தந்தை ராஜவேலு ராசிபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடம் சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மணப்பெண் தந்தை ராஜவேலு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் எஸ்பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் ராசிபுரம் டிஎஸ்பி.,விஜயகுமார் வழிகாட்டுதலில் காவல் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், சிவா, பி.கீதாலட்சுமி ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகை, ரொக்கம் திருடியது கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (55), பாலிடெக்னிக் படித்துள்ள அவரது மகன் ஹரிகிருஷ்ணன் (19) ஆகிய இருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவரிகளிடம் இருந்த நகைகள், ரொக்கம் போன்றவற்றை மீட்டனர். பின்னர் இருவரும் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் கொடுமுடி போன்ற காவல் நிலையங்கில் இது போன்ற குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.