புதிய வகை கரோனாவில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இருப்பினரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், இணை நோய் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் கூடும் போது தனிமனித இடைவெளி பின்பற்றியும், முககவசம் அணிவதும் நல்லது என தமிழக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யின் புதிய கட்டிடம் ரூ.53 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு இதுவரை புதிய கரோனா குறித்து தமிழக அரசுக்கு எந்த வகையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அளிக்கவில்லை. இருந்தபோதிலும் தமிழக அரசு, சுமார் 95 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் வசதியை பொருத்தவரை, ஏற்கனவே இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் 200 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் சேமித்து வைத்துக் கொள்ள முடிந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், கரோனா பாதிப்பு அதிகரித்த நேரத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. தற்போது 3 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கூட ஆக்சிஜனை சேமித்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா போன்ற எந்த பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொன்ற மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் தயாராக உள்ளன.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள கரோனா பாதிப்பு, பல்வேறு உருமாற்றங்களை பெற்றுள்ளது. கரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஜம்மா, ஜப்பா, ஒமிக்கிரான் போன்ற வகையிலான உருமாற்றங்கள் பெற்றன. கடந்த மாதம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, 19 மாதிரிகள் பூனாவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத ஒமிக்கிரானின் ஒரு வகை என்று கண்டறியப்பட்டது. அந்த வகையில் தற்போது கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு 3, 4 நாட்களுக்கு காய்ச்சல், சளி மட்டும் காணப்படும். வேறு பாதிப்பும் ஏற்படாது. அதிக நாட்கள் சளி, இருமல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியபடி, வீரியம் குறைந்த கரோனா கிருமிகளுடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு, ஹைப்பர் டென்ஷன் உள்ளவர்கள் பொது இடங்களில் கூடும்போது முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவி கொள்வது எல்லாம் நல்ல பழக்கமாக கூறப்பட்டுள்ளது. இவைகளையும் கடைபிடிக்க வேண்டும். பொதுவான, சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிவது என்பது பாதுகாப்பான ஒன்றாகும்.
தமிழகத்தில், 1,018 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 6 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனை என 25 மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் வரும் 6 மாதங்களில், கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளன. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார்.
மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. வரும் 13-ம் தேதி சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா, இந்திய மருத்துவர்கள் உள்ளிட்ட 137 மருத்துவர்கள் பணியிடங்களுக்கான பணி ஆணைகளை தமிழக முதல்வர் வழங்க உள்ளார். 56 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பணியானை வழங்கப்படும். மேலும், மருத்துவ ஆள் தேர்வு வாரியம் மூலம் 48 பல் மருத்துவர்களுக்கான நேர்முகத்தேர்வு முடிவடைந்துள்ளது. இந்த பணிக்காக 11,720 பேர் தேர்வு எழுதினார்கள். 8,700 பேர் தேர்வு பெற்று அவர்களிடம், தரவரிசை, சான்றிதழ் சரிபார்ப்பு, வகுப்புவாரி சுழற்சி முடிவடைந்து 48 பேரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணியிடங்களும் மிக விரைவில் நிரப்பப்படும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிதாக சேரும் பணியாளர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களில் பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றார் அமைச்சர். இந்த ஆய்வின்போது தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.