ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ.2.40 லட்சம் கொள்ளையடுத்து சென்றது தொடர்பான வழக்கில் தென்மாவட்டத்தை சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையின் போது தப்பியோடிய இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கால்முறிவு ஏற்பட்ட கொள்ளையர்கள் இருவரும் ராசிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக இருந்து வருபவர் முத்துசாமி (40). இவர் கடந்த மே.31 இரவு 11 மணி அளவில் கடைவிற்பனை முடித்துவிட்டு பணத்துடன் இருசக்கர வாகனத்தி்ல வீடு திரும்பியுள்ளார். அப்போது சுமார் ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு ரூ.2.40 லட்சம் பணத்தை கொள்ளையடுத்துச் சென்றது. இது குறித்து மங்களபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை அமைத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
வாழப்பாடி பகுதியை சேர்ந்த நெல் அறுவடை செய்யும் எந்திர வாகனம் வைத்துள்ள ஒருவரிடம் ஒட்டுநராக இருந்து வந்த உச்சிமாகாலி (22), தலைமையில் பலர் இந்த வழிபறியில் ஈடுபட்டது போலீஸாருக்கு தெரியவந்தது. இவர் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை நோட்டமிட்டு பணம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நண்பர்கள் நால்வரை வரவழைத்துள்ளார். இதனையடுத்து ஐந்து பேரும் கடந்த மே.31-ல் இருசக்கர வாகனத்தில் டாஸ்மாக் கடையின் பணத்துடன் சென்ற முத்துசாமியை தாக்கிவிட்டு பணம் பறித்துச் சென்றுள்ளனர். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது கொள்ளையர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டம் சென்று முக்கிய குற்றவாளியான உச்சிமாகாலி (22)சுப்பைய்யா என்பவர் மகன் நவநீதன் (22), கார்த்திக் பெருமாள் (23) ஆகிய முவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய இசக்கிமுத்து என்பவர் மகன் செல்வகுமார், பாஸ்கர் என்பவர் மகன் மாதவன் ஆகியோரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
கால்முறிவு: முன்னதாக குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையின் போது உச்சிமகாலி, நவநீதன் ஆகிய இருவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாம். இதனையடுத்து இருவரும் ராசிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரையும் நேரில் சந்தித்த ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார் அங்கு குற்றவாளிகளிடம் வி்சாரணை நடத்தினார்.
இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிடத் தொழிலாளி டிராக்டர் மோதி உயிரிழப்பு
ராசிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் டிராக்டர் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிடத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். ராசிபுரம் காமாட்சியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி (48), ராஜேந்திரன் (54),பூபதி (57), கந்தசாமி (60) ஆகிய நால்வரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் கட்டிட வேலைக்காக செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் இருந்து மெட்டாலா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை மூர்த்தி என்பவர் ஓட்டி சென்ற நிலையில் தண்ணீர்பந்தல்காடு அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் மீதமுள்ள மூவர் பலத்த படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.