ராசிபுரம் அருகேயுள்ள அலவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன்.2-ல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏற்கனவே 48 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் திங்கள்கிழமை புதியதாக சேர்ந்த மாணவர்களுடன் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர். அப்போது, பள்ளியின் ஆசிரியர் பிரபாகரன் (55) என்பவர் மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தள்ளாடி கீழே விழுந்து பள்ளியின் குடிநீர் பைப்பும் உடைந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த பெற்றோர்கள், ஆசிரியரே பள்ளிக்கு இப்படி வந்தால் எப்படி என தலைமையாசிரியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தலைமையாசிரியர் சரஸ்வதி அவரை வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இது குறித்து உள்ளூர் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, பலரும் பள்ளிக்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கல்வித்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மதுபோதையில் வந்ததாக கூறப்படும் ஆசிரியர் பிரபாகரன் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.