நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் விவசாயிகளின் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். ராசிபுரம் அருகேயுள்ள பொன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கான பதிவு பயிற்சி மற்றும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், பிப். 6ஆம் தேதி முதல் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சமுதாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், நிலவிவரங்களுடன், விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடமை வாரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக் குறியீடு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதனால் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் பெறுவதுடன் வலை தளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் முகாம்கள் நடைபெறும் நாள்களில் நில ஆவணங்கள், ஆதார் எண், மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 433 வருவாய் கிராமங்களில் இப்பணியினை மேற்கொள்வதற்காக 132 வேளாண் துறை அலுவலர்களும் 55 தோட்டக்கலைத் துறை அலுவலர்களும், 14 வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை அலுவலர்களும், 229 சமுதாய வள பயிற்றுநர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்பணியினை துரிதப்படுத்துவதற்காக வேளாண் பல்கலைக்கழக மாணவர்களும், இல்லம்தேடி கல்வி அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுவரை 11,000 விவசாயிகளின் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகள் வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் முகாம்களில் பங்குபெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, எலச்சிபாளையம் கால்நடை மருந்தகத்தில் மருந்து பொருட்களின் இருப்பு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விபரம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, வேளாண்மை துறையின் சார்பில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் உரங்களின் இருப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரங்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறை உடன் இணைந்து நாற்றுகள் தயார் செய்யும் வகையில் நர்சரி அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு மேற்கொண்டார்.
பின்னர் செங்காடு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கான்வாடி பணியாளரிடம் மையத்திற்கு வருகை தரும் குழந்தைகள் விபரம், பரமாரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளில் வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, உதவி இயக்குநர் கவிதா, ராசிபுரம் வட்டாட்சியர் எஸ்.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.