நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே 100 சதம் தேர்ச்சியை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஒன்றியம் தோறும் குழு அமைத்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தவும், மாணவர்களை உரிய பயிற்சி, வழிமுறை வழங்கி ஊக்கப்படுத்தவும் ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர் நி்லைப்பள்ளிகளில் பயின்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயற்சியளித்து மாணவர்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர், பிற்பட்டோர் நல அலுவலர், வேளாண் உதவி இயக்குனர்கள்,பள்ளிகளின் துணை ஆய்வாளர், வட்டார வளமைய ஆசிரியர்கள் அடங்கிய குழு ஒன்றியந்தோறும் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆட்சியர் ச.உமா உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி வழிகாட்டுதலில் இந்த குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் தொடர்ந்து பயில்வதை கண்காணிக்கவும், தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் உரிய பயிற்சியளிக்கவும், ஊக்கப்படுத்தவும் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சமூக அறிவியல், தமிழாசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், புதுசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் திங்கள்கிழமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வி.கற்பகம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற சமூக அறிவியல், தமிழ் ஆசிரியர்கள் 72 பேருக்கு பொதுதேர்வில் அரசு பள்ளிகள் 100 சத தேர்ச்சி பெற்றிட அறிவுரையும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. இதில் குழுவில் இடம் பெற்றுள்ள நாமகிரிப்பேட்டை வேளாண் உதவித்திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, பள்ளித் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி, வட்டார வளமைய ஆசிரியர் சென்றாய பெருமாள் ஆகியோரும் பங்கேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். மேலும் பயிற்சி முகாமில் 1330 திருக்குறள் ஒப்புவித்த மாணவிக்கும், தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.