ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் நேரில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.ராசிபுரம் உட்கோடத்தில் முத்துக்காளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, கணவாய்பட்டி, பெரியவரகூராம்பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை சேலம் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் சசிக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் சாலை தரம், கனம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சாலை அகலப்படுத்துதல், சாலை மேம்படுத்துதல் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார். பருவமழை, பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது நாமக்கல் கோட்டப் பொறியாளர் கே.ஆர்.திருகுணா, ராசிபுரம் உதவிக் கோட்டப் பொறியாளர் வ.கு.ஜெகதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.