நாமக்கல் மாவட்டத்தின் வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டு மதிப்பீடு பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியர் சா.உமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சந்தை வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2) –ன்படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களின் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொது மக்கள் பார்வையிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விவரம் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான வழிகாட்டி மதிப்பீட்டு துணைக்குழுவிடம் வழிகாட்டி மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக்கொண்டுள்ளார்கள்.